திங்கள், 3 ஏப்ரல், 2017

ஹனிமூன் தேசம் – உடைகளும் வாடகைக்கு…..


ஹனிமூன் தேசம் – பகுதி 10

தொடரின் முந்தைய பகுதிகளுக்கான சுட்டிகள் வலப்பக்கத்தில் Drop Down Menu-வாக இருக்கிறது! படிக்காதவர்கள் படிக்கலாமே!

பனிபடர்ந்த மலைகளும், இலை இழந்த மரங்களும்....
 
அதிகாலையிலேயே புறப்பட்ட எங்கள் வண்டி நகரிலிருந்து லே-லடாக் செல்லும் மலைப்பாதையில் சென்று கொண்டிருந்தது. ஆம் – மணாலியிலிருந்து மலைப்பாதை வழியாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இருக்கும் லே மற்றும் லடாக் பகுதிகளுக்கு சாலை வழியே பயணம் மேற்கொள்ள முடியும் – ஆபத்தான பயணம் என்றாலும் நிறைய பேர் இப்படி பயணிப்பதைப் பார்க்க முடியும். அந்த சாலையில் இருக்கும் ரோஹ்தாங்க் பாஸ் வழியாகத் தான் செல்வார்கள்.  பெரும்பாலான சமயங்களில் இந்த ரோஹ்தாங்க் பாஸ் செல்வதற்கு அனுமதி கிடைப்பதில்லை. வழியெங்கும் பனிபடர்ந்து இருப்பதால் இந்த இடத்திற்குச் செல்ல முடியாது.


நடைபழகலாம் வாங்க....

இப்படி ஒரு இடத்திற்குப் போகலாமா....

மணாலியில் இருக்கும்போதே குளிர் அதிகம் என்றால், ரோஹ்தாங்க் பகுதிக்குச் செல்லும்போது குளிர் அதிகமாகத்தானே தெரியும். தலைநகர் தில்லியிலும் குளிர் உண்டு என்றாலும் அந்தக் குளிருக்கு உண்டான உடைகள் மணாலி குளிருக்குப் போதுமானதாக இருப்பதில்லை. ஒன்று நீங்கள் இங்கே வரும்போது இங்கே இருக்கும் குளிருக்குத் தகுந்த உடைகளை வாங்கி வர வேண்டும், அப்படி இல்லை என்றால், இங்கே வந்தபிறகு வாங்க வேண்டும். அப்படி வாங்கும் பட்சத்தில் அதிகமான விலை கொடுக்க வேண்டியிருக்கும். அப்படியே வாங்கினாலும், அந்த உடைகளை தில்லியிலோ வேறு குளிர்பகுதிகளிலோ பயன்படுத்த முடியாது – புழுங்க ஆரம்பித்து விடும். வேறு என்னதான் செய்வது? குளிரைத் தாங்கி ஆக வேண்டுமே?


உறைபனி எடுத்து விளையாடலாமா....

சாலையின் இருபுறமும் பனி...

அதற்கும் வழி இருக்கிறது என்று சொல்லும் விதமாக ஜோதி சாலையோரத்தில் ஒரு கடையில் வண்டியை நிறுத்தினார். அங்கே வரிசையாகக் கடைகள். அந்தக் கடைகளில் நிறைய கம்பளி உடைகள், காலணிகள் [Gumboot], கையுறைகள் என அனைத்தும் வாடகைக்குக் கிடைக்கும். இரண்டு விதங்களில் இந்த உடைகள் கிடைக்கின்றன – ஒன்று கம்பளி மட்டும், மற்றொன்று கம்பளி உடைக்கு மேல் தண்ணீர் புகாத வாறு இருக்கும் உடைகள்! இரண்டாவது வகை உடைகள், பனிச்சறுக்கு விளையாட்டு விளையாடுவதற்கு வசதியாக இருக்கும். எது தேவையோ அதை வாடகைக்கு எடுத்து அணிந்து கொள்ளலாம்.  


எங்கும் பனி.....

பனிக்கட்டியை வீசறேன்னு கேமராவ வீசிப்புடாதப்பு.......

என்ன ஒன்று, அந்த கம்பளி உடைகள் பலரும் பயன்படுத்தி இருப்பார்கள் என நினைக்கும்போது கொஞ்சம் குமட்டத்தான் செய்தது. இந்த இடத்தில் வேண்டாம் என்று சொல்லிவிடலாம் என நினைத்தால், நாம் போகப்போகும் இடத்தில் நாங்கள் அணிந்து வந்த உடைகளை மட்டும் நம்பி போகமுடியாது! குளிர் தாங்கமுடியாது. அதனால் யார் யார் போட்டிருப்பார்களோ என்ற எண்ணங்களைத் துறந்து விட்டு, முழுங்காலுக்குக் கீழ் வரை இருக்கும் அந்த கம்பளி கோட்டுகளை அணிந்து கொண்டு, Gumboot-களையும் அணிந்து கொண்டு ஏதோ Expedition செல்வது போல ஒரு உணர்வு உங்களுக்கு வரலாம்!



உடைமைகளைச் சுமந்தபடி நடக்கும் சில பயணிகள்... 

இயற்கையை ரசித்தவாறே ஒரு நடை...

Overcoat set ஒன்றுக்கு ரூபாய் 200/-ம், Dangri set என அழைக்கப்படும் இரண்டாம் வகை உடைக்கு ரூபாய் 250/-ம் வாடகையாக வசூலிக்கிறார்கள். எத்தனை உடை தேவையோ அத்தனை எடுத்து, உங்களுடைய அளவுக்குத் தகுந்த மாதிரி, பிடித்த வண்ணத்தில் எடுத்து அணிந்து கொள்ளலாம். பனியில் விளையாடிய பின்னர் அதே கடைக்கு வந்து திருப்பிக் கொடுத்துவிடலாம். இந்த மாதிரி வசதிகளும் சில விதத்தில் நல்லவிஷயம். எங்கள் குழுவில் இருந்த அனைவருக்கும் தகுந்த கம்பளி உடைகளை அணிந்து கொண்டு, காலுக்கும் Gumboot சகிதம் வண்டியில் அமர, முன்பை விட இடப் பற்றாக்குறை வந்தது போல உணர்வு!


பனிச்சிகரத்தில் உலோகச் சிகரங்கள்!


இயற்கை அழகு....

நாங்கள் உடைகள் வாடகைக்கு எடுத்த இடம் Bahang. அங்கே இருந்து இன்னும் மலைப்பாதையில் பயணிக்க, கொஞ்சம் கொஞ்சமாக குளிர் அதிகரித்திருப்பது தெரிந்தது. கைகள் விரைக்க ஆரம்பித்தன. குறுகிய சாலைகளில் வாகனம் பயணிக்க, சாலையின் இரு மருங்கிலும் ஐஸ் உறைந்து கிடப்பதைப் பார்க்க முடிந்தது. காலை நேரம் என்பதால் அத்தனை வாகனங்கள் வந்திருக்கவில்லை. எவ்வளவு தூரம் முடியுமோ அவ்வளவு தூரம் வாகனத்தில் செல்ல வேண்டும் என்று வாகனத்திலேயே சென்று கொண்டிருந்தோம். வழியில் எதிர் புறத்திலிருந்து ஒரு மோட்டார் பைக்கில் இரு காவலர்கள் வந்து, எங்கள் வாகனத்தினைப் பார்த்ததும், வழியில் பார்த்துப் போக வேண்டும் என்றும், வாகனத்தினை நிறுத்துவதென்றால், மற்ற வாகனங்களுக்கு இடைஞ்சல் தராமல் நிறுத்த வேண்டும் என்றும் சொல்லிச் சென்றார்.

இந்த வீடு/இடம் ஒரு ஹிந்தி படத்தில் வந்திருக்கிறது.... 
படம்: க்ருஷ் - ஹ்ருத்திக் ரோஷன் நடித்தபடம்


பனியில் செய்த பொம்மை....

Gulaba என்ற இடத்திற்கு மேல் வாகனம் செல்ல முடியாது என்று சொல்லி ஒரு வளைவில் வண்டியை நிறுத்தி, எங்கள் அனைவரையும் மேலே நடந்து சென்று பனியில் விளையாடி வரும்படி அனுப்பி வைத்தார் ஜோதி.  சாலையைத் தவிர எங்கு பார்த்தாலும் பனிப்பொழிவு! சில்லென்று காற்றும் வீச, பனிக்கட்டிகளை எடுத்து ஒருவர் மீது ஒருவர் வீசி விளையாட ஆரம்பித்தோம். சிலர் பனிக்கரடி பொம்மைகள் செய்ய, மேலே நடந்து கொண்டிருந்தோம்.  அற்புதமான அனுபவம் அது. எங்கு பார்த்தாலும் உறைந்து கிடக்கும் பனி… அந்தப் பகுதியில் நாங்கள் இருந்த நேரம் நிறையவே. இன்னும் கொஞ்சம் அந்த உணர்வினை நாங்கள் பெறும் அதே சமயத்தில் நீங்களும் உணர்ந்து கொண்டிருங்கள்.  மேலே என்ன செய்தோம், என்பதை அடுத்த பகுதியில் சொல்கிறேன்.

தொடர்ந்து பயணிப்போம்…..

நட்புடன்

வெங்கட்

புது தில்லி.

16 கருத்துகள்:

  1. ஹவாடகை உடை குமட்டத்தான் செய்யும் காரணம் நம்ம ஆள் சுத்தமாக வைத்திருக்கமாட்டான் உண்மைதான் ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  2. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  3. எங்கு பார்த்தாலும் உறைந்து கிடக்கும் பனி..
    அற்புதமான அனுபவம் அது..

    தங்களிடைய கைவண்ணத்தில்
    வாசிக்கும் எனக்கும் அற்புதமான அனுபவம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

      நீக்கு
  4. படங்கள் மிக மிக அழகு ஜி! உங்கள் பதிவும் அப்படியே! இது போன்ற இடங்களுக்குச் செல்ல முடியுமா என்று தெரியவில்லை...உங்கள் மூலம் கண்டு களிக்கிறோம்...தொடர்கிறோம்..

    கீதா: வெங்கட்ஜி நாங்கள் முதல் முறை சென்ற போது இப்படியேதான் வண்டியை சற்று தூரத்தில் நிறுத்திவிட்டு பனியில் விளையாடத் தொடங்கினோம். சறுக்கி விளையாடி அங்கு ஜவான்கள் இருந்தார்கள். ஒரு எல்லைக்கு மேல் அனுமதி இல்லை. நாங்கள் நிறைய நடந்தோம் பனியில்.....வாடகைக்குக்குத்தான் உடை எடுத்தோம் எனக்கும் முதலில் ஐயோ எத்தனை பேர் அணிந்ததோ....அரிக்குமோ என்றெல்லாம் தோன்றியது. அது போல மாற்றி மாற்றி போட்டுப் பார்த்து ஓரிரண்டு அரிக்கவும் பயம் தொற்றிக்கொண்டது..அவர்கள் எல்லா உடைகளும் க்ளீன் செய்வோம் என்றெல்லாம் சொன்னார்கள்...வேறு வழி? கம் பூட்ஸ் எல்லாம் போட்டுக் கொண்டு ..மகன் ஸ்லெட்ஜில் கொஞ்ச தூரம் பயணம் செய்தான்...எல்லாம் காசுதான்....இரண்டாம் முறை செல்லும் போது ரொத்தாங்க் பாசில் ஸ்னோ இல்லை....எனவே சிறிது தூரம் ம்யூல் பயணம் செய்து ஸ்னோ பாயின்ட் சென்றோம்..அப்போது ஸ்பிட்டி வேலி போகும் போது வழியில் என்பதால்..

    ராஃப்டிங்க் தவிர வேறு அட்வென்ட்சர் போனீர்களா ஜி?

    பல நினைவுகள் மீள்கிறது தங்கள் பயணக் குறிப்புகள். படங்கள் வெகு அழகு ஜி! தொடர்கிறோம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

      நீக்கு
  5. திருவநந்தபுரம் பத்மநாபர் கோவிலுக்கு வெளியூர் பயணிகள் சௌகரியத்துக்காக முண்டு வாடகைக்கு கொடுக்கிறார்கள் வாடகைத் துணி என்றதும் நினைவுக்கு வந்தது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பல இடங்களில் பாரம்பரிய உடைகளில் புகைப்படம் எடுத்துக்கொள்ள, உடைகளை வாடகைக்குத் தருவதுண்டு.....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி G.M.B. ஐயா.

      நீக்கு
  6. தங்கள் பதிவைப் பார்த்ததும் காஷ்மீரில் உள்ள குல்மார்க் சென்றபோது கீழே டாங் மார்க் (Tang Marg) இல் இதுபோல் குளிரைத் தாங்கக்கூடிய உடைகளை வாடகைக்கு எடுத்து சென்றது நினைவுக்கு வருகிறது. படங்கள் அருமை. பாராட்டுகள்! அடுத்த நிகழ்வு என்ன என்று அறிய காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  7. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

    பதிலளிநீக்கு
  8. அழகான படங்கள், அருமையான அனுபவ பகிர்வு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

      நீக்கு
  9. படங்களைப் பார்த்தவுடனேயே, கனவுப் பிரதேசம் என்ற எண்ணம்தான் தோன்றிற்று. சுற்றிலும் பனி.... நினைக்கவே சில்லிடவைக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிச்சயம் கனவுப் பிரதேசம் தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....